Sunday, February 6, 2022

திருக்குறள் கவிதை - 2

அவன் 

கட்டிளங்காளை 

அழகிலே அளவிலாதவன் 

அளவிலே அலகானவன்..


அவன் 

பெற்றோர் விருப்பப்படி 

சுற்றத்து 

மணமுன்றிலுக்கு 

சென்றான் 

முன்னரே... 


பணித்த பணிகளை 

நுணுக்கமாய் முடித்தான். 

மணமக்கள் பெற்றோருக்கு 

அணுக்கமாய் இருந்தான். 

இவன் செய்த 

வேலைகளை 

பார்த்தவர்களை 

திக்குமுக்காட வைத்தான்

துல்லியத்திலே..  


தேனிலே ஊறிய 

பலாப்பழத்தை 

மொய்க்கும் தேனீக்களாய் 

கன்னியர் விழிப்பார்வை 

தைத்தது இவனை..


அக்கூட்டத்திலே ஒரு 

அரிவை 

அஞ்சனமிட்ட 

அஞ்சுகம் 

கங்குலை மிஞ்சும் 

கார்குழல் 

கால் 

வரை நீளும்.. 


அவள் 

அவனியில் 

பவனி வரும் 

ஆணிப்பொன் 

அம்புலி.. 


அவள் விரும்பினாள் 

அவனை தன் 

ஆளனாக 

தன் மணமாலை சூடும் 

தோளனாக..


அவன் 

வந்த திருமணம் 

நன்று முடிந்ததில் 

மட்டற்ற மகிழ்ச்சி 

மற்றோருக்கும் மணமக்கள் 

பெற்றோருக்கும்.. 


வேலை 

எல்லாம் முடிந்த பின்னே 

சுற்றத்தாரோடும், தான் ஒன்றாக 

சுற்றிய நண்பர்களோடும் 

அளவளாவும் வேளை.. 


தன் 

மனம் கவர் 

பைங்கிளி 

விழிகளால் 

இவனை 

வெல்லவும் முடியாது 

தள்ளவும் முடியாது 

தத்தளித்து நின்றாள்

தூரத்திலே, 

மோனத்திலே..  


தன்  

மேல் ஊரும் 

சூழ்மேகத்தின் நிழலை 

அறியாதா நிலம்?? 


தன் மீது ஊரும் 

விழியின் 

சொந்தக்காரியை  

பந்தலிட்டு 

மன்றல் முடிக்கப்போகும் 

பந்தக்காரியை 

அவன் காண... 


நாணத்திலே 

தன் ஆளனை,

நெஞ்சு

நிறை மாலனை விடுத்து 

தரை பார்த்தாள்... 


அவன் காணாத போது 

தான் பார்த்து மெல்ல 

புன்னகை பூத்தாள்... 


*திருக்குறள்* 

யான்நோக்குங் காலை நிலன்நோக்கும் நோக்காக்கால் 

தான்நோக்கி மெல்ல நகும் 

Tuesday, February 1, 2022

திருக்குறள் கவிதை 1

தேக்கனைய தேகன் - அவன் 
வேல் வீசும் பாங்கைக் கண்டு 
வெருண்டோடும் வேங்கை.

வேல் வீசி நீண்ட தடக்கை 
அம்பெய்து காய்த்த மணிக்கை 
சமரில் வெல்வது உள்ள கிடக்கை.

தன் குல மரம் காக்க 
தன் இன மறம் காட்ட 
களம் கண்டான் 
காளை.

எதிர்ப்போரை 
ரணம், 
நிணம், 
பிணம் 
ஆக்கியது 
அவன் கரம்.

எதிரில் ஒரு வேழம் 
காது ரெண்டும் இரு சொளகு அகலம் 
குறுக்கே வந்தோரை 
குறுக்கிலே மிதித்து 
அனுப்பியது பரலோகம்.

கண்டான் நம் காளை 
அக்கரியை 
அக்கறையாய்.

அதனை வீழ்த்த 
கோள் கொண்டு 
வேல் கொண்டான்.

கரியை வீழ்த்த 
மாரியாய் பொழிந்தான் வேலை 
மரிக்க போகும் வேளை 
தன் திறமெல்லாம் கூட்டி 
தாக்க வந்தது அவனை.

அது மடிய 
ஒரு வேல்வீச்சு மீதி...
என்ன ஒரு அநீதி!
காளையின் கையில் 
வேலே இல்லை 
துடித்து தேடினான் 
ஒரு வேலை
ஒருவேளை தன் பின்னே 
இருக்குமோ என

வலம் இடம்  
வளைத்து தேடியும் 
கை கூடவில்லை.
கைக்கு ஒரு வேல் 
அகப்படவில்லை.

பின் 
கண்டு கொண்டான் 
ஒன்றை...
ஆம்.. அது இருந்தது 
அவன் மார்பிலே பாய்ந்து.

பார்த்தவுடன் 
பூத்தான் புன்னகை
வீழ்ந்ததடா வேழம் என்று... 
 
*திருக்குறள்*
கைவேல் களிற்றொடு போக்கி வருபவன் 
மெய்வேல் பறியா நகும்