Saturday, March 11, 2023

ஓகே, ஃபைன்

மார்கழி மாதத்து அதிகாலை, தெரு நாய்கள் எல்லாம் வாலை சுருட்டிக் கொண்டு தூங்கிக் கொண்டிருந்தன. அவற்றின் தூக்கத்தை கெடுத்தபடி, ஒரு Ola ஆட்டோ அந்த அபார்ட்மெண்ட் வாசலில் வந்து நின்றது. அந்த ஆட்டோ டிரைவர் போனை எடுத்து கஸ்டமர் பெயர் "இராஜேந்திரன்" என்று இருந்ததைப் பார்த்துவிட்டு டயல் செய்து, அட்டெண்ட் செய்யப்பட்டவுடன், "சார், நான் வந்து விட்டேன்" என்றார். "ஓகே, ஃபைன்.. இதோ வந்து விட்டேன்" என்று எதிர்முனையிலிருந்து குரல் கேட்டது..

சிறிது நேரத்தில் நல்ல உடல்வாகுடன் ஒரு இளைஞன் வந்து ஆட்டோவில் ஏறினான். "சார், நீங்கள் தான் முதல் சவாரி, அது மட்டுமில்லாம இந்த அதிகாலைல இந்த குளிர்ல வந்திருக்கேன்.. ஒரு 50 ரூவா சேத்துப் போட்டு குடுங்க சார்.." என்றார் டிரைவர். அவரை அந்த இளைஞன் மேலும் கீழும் பார்த்து விட்டு "ஓகே, ஃபைன்" என்றான். மன நிறைவோடு, OTP எண்ணை உறுதி செய்து விட்டு, டிரைவர் ஆட்டோவை ஸ்டார்ட் செய்தார்.

போகும் வழியில், ரோட்டில் போட்டிருந்த மஞ்சள் சதுரங்களைப் பார்த்து விட்டு, அந்த இளைஞன் அதற்கு என்ன அர்த்தம் என்று ஆட்டோ டிரைவரிடம் கேட்டான். அவர் சிரித்துக் கொண்டே "அதெல்லாம் தெரியாது தம்பி..." என்றார். கொஞ்ச தூரத்தில் இருந்த ரெட் சிக்னலில் நிற்காமல் ஆட்டோவை ஓட்டிக் கொண்டே "இந்த நேரத்துல ஏந்தான் சிக்னல் போடுறாங்களோ?? தெரியல.. யாரு தான் நிப்பா??" என்றார். அந்த இளைஞன் சிரித்துக் கொண்டே "ஓகே, ஃபைன்" என்றான்.

அந்த இளைஞன் இறங்க வேண்டிய இடம் வந்ததும், வண்டியை நிப்பாட்டினார் ஆட்டோ டிரைவர். பயணத்திற்கான தொகையை மொபைல் ஆப்-பில் பார்த்து விட்டு, அதோடு 50 ரூபாய் சேர்த்து கொடுத்துவிட்டு "ஓகே?" என்றான்.  "ஓகே தம்பி" என்று சொல்லி விட்டு திரும்பியவரை, "ஒரு நிமிஷம்.." என்று கூறி இரண்டு பேப்பரை கையில் கொடுத்தான் அந்த இளைஞன். ஆட்டோ டிரைவர் புரியாமல் பார்க்கவே, "ஃபைன்" என்று சொன்னான். அதிர்ச்சியடைந்த டிரைவர், பேப்பரை வாங்கிப் படித்தார்.

இராஜேந்திரன் IPS, போக்குவரத்து காவல் ஆணையர்  என்ற தலைப்புடன் கூடிய அந்த பேப்பர், "மோட்டார் வாகன சட்டம் எண்...." என்று தொடங்கி, "கட்டணத்தை விட கூடுதலாக பணம் கேட்டதற்கும், சாலை விதிகளை முழுமையாக தெரிந்து கொள்ளாததற்கும், சிவப்பு விளக்கு சமிக்கையில் நிற்காததற்கும் என மூன்று வகைகளில் மோட்டார் வாகன சட்டத்தை மீறியதற்காக தண்டக் கட்டணத்தை 3 நாட்களுக்குள் கட்ட வேண்டும்" என்று குறிப்பிட்டு இருந்தது.          

இன்னொரு பேப்பரில், அதிகாலையில் சிக்னலில் நிற்காமல் சென்ற வாகனங்களால் ஏற்பட்ட விபத்துகளை பற்றிய விபரம் இருந்தது.



ஆகவே இக்கதையை படிக்கும் நீங்களும், அதிகாலை நேரமானாலும் போக்குவரத்து சிக்னலில் சிவப்பு விளக்கு எரிந்தால் வண்டியை நிறுத்தி விட்டு, பச்சைக்கு மாறிய பின் செல்லுங்கள். ஏனெனில் "மனித உயிர் விலைமதிப்பற்றது".

ஓகே. ஃபைன்?