Sunday, December 21, 2014

காப்பு

அந்த பேருந்து நிலையத்தில் கடைசி பேருந்துக்காக நான் காத்துக்கொண்டு இருந்தேன். நேரம் நள்ளிரவை தாண்டி இருந்ததால் அங்கொன்றும் இங்கொன்றுமாக சொற்பமான ஆட்களே இருந்தனர். அதில் ஒருவர் என்னையே கவனித்துக் கொண்டு இருப்பதுபோல உணர்ந்தேன். ஆகவே நான் நின்றுகொண்டு இருந்த இடத்தைவிட்டு வேறொரு இடத்திற்கு சென்றேன்.


நான் இந்த புதிய இடத்திற்கு வந்த பிறகும், அவர் என்னை பின்தொடர்ந்து வந்து கண்காணிக்கவும் நான் அதிர்ச்சி அடைந்தேன். ஆழ்மனதில் லேசான பயத்துடன் எனது பேருந்துக்காக காத்திருந்தேன். அப்பொழுது வேறொரு நபர் என்னை கண்காணித்துக் கொண்டு இருப்பவரிடம் "என்ன செல்வம்? நான் போகவா?" எனக் கேட்க,"இல்லண்ணே நானே பாத்துக்கிறேன்" என்று மர்மப்புன்னகையுடன் என்னை பார்க்க, எனக்கு பயத்தில் உடம்பு முழுவதும் வியர்த்துக்கொட்டியது. தினசரி நாளிதழில் படித்த வழிப்பறி கொள்ளை எல்லாம் என் நினைவில் வந்து என் பயத்தை அதிகமாக்கியது.

எனக்கான பேருந்து சீக்கிரம் வரவேண்டும் என்று கடவுளை வேண்டிக்கொண்டே, என்னை கண்காணிப்பவரை நான் கவனித்தேன். குள்ளமான கரிய தொப்பையுடன் கூடிய ஆஜானுபாகுவான உடம்பு. அவர(ன)து கையில் ஒரு வித்தியாசமான ஒரு காப்பு. அதைப் பற்றி யோசித்துக் கொண்டிருக்கும்போதே நான் போகவேண்டிய பேருந்து வரவும், ஒரு நிம்மதி பெருமூச்சுடன் அதில் ஏறி, ஒரு சன்னலோர இருக்கையில் அமர்ந்து கொண்டேன்.

பேருந்து புறப்படும் நேரத்தில், என்னை கண்காணித்தவன் அதே பேருந்தில் ஏறவும் எனக்கு தூக்கிவாரிப் போட்டது. அதையும் விட அவன் என் அருகில் வந்து அமர, எனக்கு பயத்தில் நாக்கு மேல் அன்னத்தில் ஒட்டிக் கொண்டது. வேறு இருக்கைக்கு செல்லலாமென யோசித்து நான் எழுந்திருக்க முயல, அவன் என்னை அங்கேயே அமரும்படி ஹஸ்கி குரலில் ஆணையிட, அப்படியே அமர்ந்தேன். வேறு எப்படி அவனிடமிருந்து தப்பிக்கலாமென யோசித்துகொண்டிருக்கும்போதுதான் கவனித்தேன், பேருந்து நெடுஞ்சாலையில் வேகமாக சென்று கொண்டிருந்தது. திடீரென "டொம்" என்ற பெரும் சத்தம் கேட்டது.

அதன்பிறகு நான் கண்விழித்துப் பார்க்கையில் நான் ஒரு அரசாங்க மருத்துவமனையில் இருந்தேன். என்னைச் சுற்றி இருந்த படுக்கைகளில், நான் வந்த பேருந்தில் பயணித்த எல்லோரும் கை உடைந்தோ அல்லது கால் உடைந்தோ வலியில் முனகிக்கொண்டிருந்தனர். நாங்கள் வந்த பேருந்து விபத்துக்குள்ளானது எனக்கு புரிந்தது. ஆனால் எனக்கு ஒரு விஷயம் விளங்கவில்லை. எல்லோருக்கும் ஏதோ ஒருவிதத்தில் பலத்த அடிபட்டிருக்க எனக்கு சில சிறிய சிராய்ப்புகள் மட்டுமே. யோசிக்கும்போதுதான் என்னை கண்காணித்து வந்து பின் என் அருகில் அமர்ந்து என்னை அங்கேயே  அமரச்சொல்லி ஆணையிட்டவன், விபத்தின்போது என்னை சன்னலின் வழியே தூக்கி எறிந்தது என் ஞாபகத்திற்கு வந்தது. உடனே அவருக்கு என்ன ஆனது என அறிய ஆவல் கொண்டு எல்லா படுக்கைகளிலும் பார்க்கிறேன். ஆனால் அவரை காணவில்லை. அங்கிருந்த செவிலி ஒருவரிடம் அவரின் அங்க அடையாளங்களை சொல்லி கேட்டால், அப்படி யாரும் அங்கு அனுமதிக்கபடவில்லையென சொன்னார். நான் ஆச்சரியத்தை ஜீரணம் செய்ய முயற்சி செய்துகொண்டு இருக்கையில், விஷயம் தெரிந்து என் மனைவி கண்ணீரும் கம்பலையுமாக நான் இருந்த அறைக்குள் நுழைந்தாள்.

எனக்கு எதுவும் அடிபடவில்லை எனக்கூறி அவளை ஆசுவாசப்படுத்திக் கொண்டிருக்கையில், எனது சொந்த ஊரிலிருந்து அம்மா, என் மனைவிக்கு அழைத்து என்னிடம் அழுகையினூடே என்னை விசாரிக்க எனக்கு எந்த அடியும் படவில்லை எனக்கூறி சமாதானப்படுத்தினேன். இருந்தாலும் அவர் என்னை பார்க்க கிளம்பி வரலாம் என்றால், எனது ஊரில் உள்ள "செல்வவிநாயகர்" ஆலயத்தில் "காப்பு" கட்டியிருப்பதால் வரமுடியவில்லை என்று கூறினார்.

Saturday, October 4, 2014

ஆல்பபெட்டும் அறிவியலும் கொஞ்சம் அக்கப்போரும்

A - அமீபா

ஒரு செல் உயிரி. இதை வரைவது மிகவும் எளிது. ஏனெனில் இதற்கு தனிப்பட்ட உருவம் இல்லை.ஒரு closed polygon அதற்குள் ஒரு கரு மையம் அவ்வளவு தான்.

இந்த கேள்வி பரிட்சையில் வந்தால் மிக எளிதாக மார்க் வாங்கிவிடலாம் என்று ஆறாவது படிக்கும் போது சொல்லிகொடுத்தது என் நினைவில் இன்றும் உள்ளது..

B - பிரௌனியன் இயக்கம்

கூழ்மத்திலுள்ள ஒவ்வொரு துகளும் எந்த ஒரு ஒழுங்கும் இல்லாத திசையில், வேகத்தில் இயங்குகின்றன. இதுவே பிரௌனியன் இயக்கம்.

திருவாளர் சுஜாதா தனது "நகரம்" சிறுகதையில் நகரத்து மாந்தர்களின் இயக்கத்தை பிரௌனியன் இயக்கத்தோடு ஒப்பிட்டுருப்பார்.

C - கார்பன் டெட்ரா குளோரைடு 

இது தீ அணைப்பான்களில் பயன்படுகிறது. இது கீழ்க்கண்ட பதிலீட்டு வினையிலிருந்து கிடைக்கிறது.

CH4 + Cl2  à CH3Cl + HCl
CH3Cl + Cl2  à CH2Cl2 + HCl
CH2Cl2 + Cl2  à CHCl3 + HCl
CHCl3 + Cl2  à CCl4 + HCl

இந்த வினையில் மீத்தேன் குளோரினுடன் வினைபுரிந்து குளோரோ மீத்தேன்(CH3Cl), மீத்தைல் குளோரைடு(CH2Cl2) , குளோரோபார்ம் (CHCl3), கார்பன் டெட்ரா குளோரைடு(CCl4) ஆகியவற்றை முறையே தருகிறது.

குளோரோபார்ம் கண்டுபிடிப்பதற்கு முன்பு, ஆபரேஷன் செய்வதற்கு முன்னால் நோயாளியின் பின் மண்டையில்  அடித்து மயக்கமுற செய்து பின்பு ஆபரேஷன் செய்வார்களாம்.

D -  டொமினோ எபெக்ட் 

ஒரு நிகழ்வு மற்றொரு நிகழ்வை ஆரம்பிக்க, அது மற்றொரு நிகழ்வை ஆரம்பிக்க... இப்படி தொடர்ச்சியான நிகழ்வுக்கு டொமினோ எபெக்ட் என்று பெயர்.

எடுத்துக்காட்டாக பின்வரும் ஹோண்டா விளம்பரத்தை பார்க்கலாம்.
http://www.youtube.com/watch?v=zgmtU_prs3I

அபூர்வ சகோதரர்கள் படத்தில் கமல், டெல்லி கணேஷை கொல்லும்போது பயன்படுத்திய யுக்தி இது.
http://www.youtube.com/watch?v=qXoNySZ8nvI

E - எபிநெப்ரின் 

அட்ரினலின் சுரப்பி இந்த ஹார்மோனை சுரக்கிறது. இது அவசர கால ஹார்மோன் என அழைக்கப்படுகிறது. ஏனெனில் இது அவசர காலங்களில் மூளை மற்றும் உடலை கட்டுபடுத்தி, அபாயத்திலிருந்து காக்க/தப்பிக்க உதவுகிறது.

நாம் ரோட்டில் திடீரென ஒரு காரை எதிர்கொண்டால் நமது உடலும் மூளையும் எவ்வாறு ரியாக்ட் செய்கிறது என "கற்றதும் பெற்றதும்"-இல் சுஜாதா எழுதி இருந்தார். அதன் சுருக்கம் கீழே....


  • எபிநெப்ரின் சுரத்தல் 
  • இதயம் வேகமாக செயல்பட்டு தேவையான உறுப்புகளுக்கு அதிக இரத்தத்தை செலுத்துதல். இதனால் சில உடல் பாகங்களில் இரத்தம் குறைதல். எ.கா - முகம் வெளிரிப்போதல்  
  • கண் பெரிதாகுதல்  - ஆபத்தை முழுதாக பார்க்க 
  • உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்ற முனைதல் - ஒருவேளை அடி பட்டால், கழிவிலுள்ள கிருமிகள் அடி பட்ட இடத்தை தாக்காமல் இருக்க
மனித மூளை போன்றொரு கம்ப்யூட்டர். ம்ஹூம் .... சான்சே இல்லை...

F - ∴பேட் மான்(Fat man) 

இரண்டாம் உலகப்போரின்போது நாகசாகி நகரத்தின்மீது வீசப்பட்ட அனுகுண்டின் பெயர். இது அணுக்கரு இணைவின் அடிப்படையிலானது.

ஹிரோஷிமா நகரின்மீது வீசப்பட்டது லிட்டில் பாய். பெயர்தான் சின்னப்பையன் ஆனால் விளைவுகள் எவ்வளவு அதி பயங்கரமானதென உலகம் அறிந்ததே.

G - கிளிசரின் 

மணம், நிறமற்ற இனிப்பு சுவையுடைய கெட்டியான திரவம் கிளிசரின்/கிளிசரால். அலோபதி மருந்து தயாரிப்பில் பெருமளவில் பயன்படுகிறது. 

இதன் மூலக்கூறு வடிவம் கீழே...













இதன் பாகியல் எண் அதிகம். அதாவது விளக்கெண்ணெய் போல கெட்டியானது. ஆகையால் எளிதில் ஆவியாகாது / காய்ந்து போகாது.

பணம் எண்ணும்போது கையை ஈரப்படுத்தி கொள்ளவும் / ரப்பர் ஸ்டாம்ப் மை காய்ந்து போகாமலிருக்கவும் பயன்படுகிறது.

H - ஹாலுசிநேசன்